Published Date: December 16, 2024
CATEGORY: CONSTITUENCY
மதுரை மத்திய தொகுதியில் 50வது வார்டுக்குட்பட்ட சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் மூலம் 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டிடம் மற்றும் மராமத்து செய்யப்பட்ட வகுப்பறையை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து மராமத்து செய்யப்பட்ட வகுப்பறையை ஆய்வு செய்த அமைச்சர் விரைந்து மேற்கொள்ள வேண்டிய மற்ற பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பயின்று வரும் தத்தனேரி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் வினோத்குமார் பேட்டரி வாகனம் கேட்டு கடந்த ஒரு மாதம் முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்திருந்தார்.
அவரது நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பேட்டரி வாகனம் வழங்கிய அமைச்சர் மாணவருடன் உரையாடினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 75 ஆவது வார்டு சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் அங்கன்வாடி மையத்துக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எழுது உபகரணங்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டிசெல்வி மிசா பாண்டியன், மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ராஜேந்திரன், கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் இந்திரா, உதவி நகர் நல அலுவலர் அபிஷேக் மற்றும் அதிகாரிகள் தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Media: Dinakaran